Wednesday, May 28, 2008

தேமுதிக தலைவரின் நேர்முக பேட்டி,

டெல்லி விசிட்டில் நீங்கள் எதிர்பார்த்தது என்ன? கிடைத்தது என்ன?

“மிக நன்றாக அமைந்திருந்தது. தமிழ்நாட்டில் இருந்து தொண்டர்கள் கொஞ்சம்பேர் அங்கே வந்திருந்தாலும் ,டெல்லியிலிருந்தே கூடிய கூட்டம் சாதாரணமானதல்ல. பொதுவாக டெல்லியில் தமிழ்நாட்டில் கூடுகிற மாதிரி அரசியல் கூட்டங்களுக்கு கூட்டம் கூடாது. அதற்கு அவ்வளவு ரெஸ்பான்ஸும் இருக்காது. ஆனால், அங்குள்ள மக்கள் அந்த மரபை உடைத்து என்னை சந்தோஷக்கடலில் ஆழ்த்தி விட்டார்கள். தவிர, இதுவரைக்கும் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் எதுவும் டெல்லியில் அலுவலகம் திறக்கவில்லை. அவரவரும் தமிழ்நாடு இல்லத்தில் ஓர் அறையை வைத்துக்கொண்டு ‘லாபி’ நடத்துவார்கள். நாம் அப்படி இருக்கக்கூடாது. தமிழர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் பூராவும் விரவிக் கிடக்கிறார்கள். அவர்களுக்கும் பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றையும் நாம்தானே கவனிக்க வேண்டும்? அதற்காக டெல்லியில் ஓர் அலுவலகம் திறக்கச்சொல்லி நிறையப்பேர் கேட்டார்கள். இதேபோலத்தான் மும்பையில் 40 இலட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். அங்கே அவர்கள் கேட்டதற்கு இணங்க ஓர் அலுவலகம் திறந்தோம். இப்போது நாட்டின் தலைநகரில் திறந்துள்ளோம்!”

கர்நாடகா_பெங்களூருவில் இதைவிட அதிகமாய் தமிழர்கள் வசிக்கிறார்கள். அங்கே முதலில் அலுவலகம் திறக்காமல் டெல்லிக்கு மட்டும் என்ன அவ்வளவு அவசியம்? அவசரம்?

“பெங்களூருவைப் பொறுத்தவரை 14 தொகுதிகளில் தமிழர்கள் வாழும் பகுதி இருக்கு. அங்கே தொகுதி வாரியாக அலுவலகங்கள் அமைக்கணும். அதையெல்லாம் நம்பிக்கையான, பொறுப்பான ஆட்கள் நடத்த முன் வரவேண்டும். தவிர, நம்ம கட்சி ஆரம்பித்து மூன்று வருடங்கள்தானே ஆகிறது. . இது இப்போதுதானே ஆரம்பம்? ஒவ்வொன்றாகத்தானே இதைச்செய்ய முடியும்? நம்பிக்கையான நபர்கள் முன்வரும்போது அங்கெல்லாம் அலுவலகங்கள் திறக்கப்படும்!’’

தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க., தி.மு.க. போன்ற முன்னணி கட்சிகள் கூட டெல்லியில் அலுவலகம் அமைக்காத நிலையில், நீங்கள் திறந்திருப்பது கொஞ்சம் ஓவராகப்படுவதாக பேச்சு உள்ளதே?

“இதில் என்ன இருக்கு? எங்களுக்கு மும்பையிலும் சரி, டெல்லியிலும் சரி நிறையப்பேர் கோரிக்கை வைத்தார்கள், அலுவலகங்களைத் திறந்திருக்கோம். அதே கோரிக்கையை அங்குள்ள மக்கள் நீங்கள் சொல்லும் கட்சிகளிடம் ஏன் வைக்கவில்லை என்று அவர்களைத்தான் கேட்க வேண்டும்!’’

டெல்லி அலுவலகத் திறப்பையொட்டி அதன் அன்றாட வேலைகள், செயல்திட்டங்கள் என்று ஏதாவது வைத்துள்ளீர்களா?

‘‘செயல் திட்டம் என்று தனியாகச் சொல்வதில் அர்த்தமில்லை. அங்குள்ள மக்களின் அன்றாடப் பிரச்சனைகளைத்தான் கவனிக்கப்போகிறோம். இப்போது நான் போனபோது நடந்த சம்பவங்களையே எடுத்துக் கொள்ளுங்கள்! நான் போனவுடன் அங்குள்ள இலட்சக்கணக்கான தமிழ்மக்களுக்கு ரேஷன்கார்டு இல்லை; வாக்காளர் அடையாள அட்டை இல்லை; வாழ்வுக்குப் பாதுகாப்பு இல்லை... என்றெல்லாம் புகார் சொன்னார்கள். அதை உடனடியாக அங்கே நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, அங்குள்ள முதலமைச்சர் ஷீலாதீட்சித்திடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டேன். அவரும் உடனே சந்திக்க அனுமதி தந்தார். அவர் மற்ற முதல்வர்களைப்போல் இல்லை. ரொம்பவும் இயல்பாக நடந்து கொண்டார். மக்களின் குறைகளை பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். ஒரு இலட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் உள்ள அத்தனைபேருக்கும் ரேஷன் கார்டு கொடுப்பதாக உறுதியளித்தார். வாக்காளர் அடையாள அட்டைக்கும் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவாதம் கொடுத்தார். இதையெல்லாம் தலைமைக்கழகத்தில் முக்கிய நிர்வாகிகளிடம் பேசிவிட்டுத்தான் வந்தேன்!’’

டெல்லி முதல்வரிடம் பேசியது சரி. சரத்பவாரிடம் பேச என்ன அவசியம்?

“உண்மையிலேயே நட்பு முறையில்தான் பேசினேன். நம்புங்கள். அவருக்கு சென்னையில் நிறைய நண்பர்கள் உண்டு. அவர்கள் அவரைச் சந்திக்கச் சொன்னார்கள். ஒரு முறை அவர் சென்னை வந்தபோது சந்திக்க நினைத்தேன். பல்வேறு காரணங்களால் முடியாமல் போனது. அடுத்ததாக கடந்த 26, 27 தேதிகளில் நண்பர் திருமணம் ஒன்றிற்கு மதுரை வந்திருந்தார். அப்போதும் சந்திக்க நினைத்து முடியாமல் போனது. இப்போது டெல்லிக்குப் போனபோது, இப்போதாவது பவாரை சந்திக்கலாமே என்று கேட்டார்கள் எனது நண்பர்கள். கேட்டவுடன் சந்திப்புக்கு அனுமதியும் கிடைத்தது. போய் சந்தித்தேன். எல்லாமே மரியாதை நிமித்தமான சந்திப்புதான்!’’

அதற்காக பிரகாஷ் காரத் சந்திப்பும் அப்படித்தான் என்றால் எப்படி ஏற்றுக்கொள்வது? அவருடனான சந்திப்பில் அரசியல் பேசவேயில்லையா?

(இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் பெரிதாகச் சிரிக்கிறார். அதில் பல அர்த்தம் பொதிந்து கிடப்பதை நம்மால் உணர முடிவதை அவரும் உணர்ந்து கொள்கிறார்)

“எல்லோருமே இப்படித்தான் சொல்கிறார்கள். சிலர் எழுதுகிறார்கள். ஆனால் அப்படி இல்லவேயில்லை. அப்படி ஒன்று நடந்திருந்தால் நான் மறைக்கவும் மாட்டேன். அதே சமயம் எல்லாவற்றையும் வெளியே சொல்லவும் முடியாது. நான் சந்தித்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் சில கமிட்மெண்ட்டுகள், நெருக்கடிகள் இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் இது மிலிட்டரி ரகசியம் போல பாதுகாக்கப்பட வேண்டியதாகும்!’’

டெல்லியில் மூன்றாம் அணித் தலைவர்கள் பிரகாஷ்காரத், சரத்பவார் போன்றோரைச் சந்தித்த நீங்கள் காங்கிரஸ், பா.ஜ.க. தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லையே? அதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறீர்கள்?

“இதிலும் எந்த அரசியலும் இல்லை. பரதனுக்கும், காரத்துக்கும் நேரம் கேட்டு கடிதம் கொடுத்திருந்தேன். காரத் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தார். பரதனிடம் கிடைக்கவில்லை. அதுபோல இன்னும் சிலருக்குக் கடிதம் கொடுக்கப்பட்டது. அவர்களிடம் அப்பாயிண்மெண்ட் கிடைக்கவில்லை. அதனால் இது பெரிதுபடுத்தப்பட்டுள்ளது!’’

எந்தக் கட்சியோடும் கூட்டணி இல்லை என்று தொடர்ந்து அறிவித்து வந்த நீங்கள், இப்போது டெல்லியில் ‘தமிழ்நாட்டுக்கு நல்லது செய்வேன் என்று எழுதிக்கொடுக்கிற கட்சியோடு கூட்டணி’ என்று அறிவித்துள்ளீர்களே? இது உங்கள் கட்சிக்குப் பின்னடைவு இல்லையா?

“இதில் என்ன பின்னடைவு? தொகுதி உடன்பாடு எழுதிக் கொடுத்துக் கொள்கிறீர்கள்? எனக்கு இரண்டரை வருஷம், உனக்கு இரண்டரை வருஷம் சி.எம். பதவி என்று எழுதிக் கொடுத்து பதவியை அனுபவிக்கிறீர்கள். ஆனால் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்வேன்னு எழுதிக் கொடுக்கக்கூடாதா? அதைச் செய்யுங்க. கூட்டணிபற்றி பரிசீலிப்போம்னு சொல்றேன். இதுல என்னங்க தப்பு?’’

எந்த மாதிரியான விஷயங்களை எழுதிக்கொடுக்கவேணும்னு கேட்கிறீங்க? இதில் குறைந்தபட்ச செயல்திட்டம் மாதிரி ஏதாவது உண்டா?

“அதற்கு இன்னும் காலங்கள் இருக்கு. நேரம் வரும்போது மனதில் அப்போது தோன்றுவதை எழுதச் சொல்லுவோம். உதாரணத்திற்கு முல்லைப்பெரியாறு அணை விவகாரம் இருக்கு. பாலாறு பிரச்னை இருக்கு. ஒகேனக்கல் பிரச்னை இருக்கு. நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது கூட்டுப் போட்டு ஓட்டு வாங்கும் கட்சிகளே பின்னர் வேறு வேறு பிராந்தியத்தில் நின்று தமிழ்நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்கின்றன. காவிரி பிரச்னைக்காக அன்று வாழப்பாடி ராமமூர்த்தி தன் அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்தார். இப்போது இத்தனை அமைச்சர்கள் இருக்கிறார்கள். பிரச்னைகளும் எக்கச்சக்கமாய் இருக்கின்றன. யாராவது ஓர் அமைச்சர் பதவி விலக முன்வருவாரா? அப்படிப்பட்ட பிரச்னைகளைத்தான் நாங்கள் எழுதிக் கேட்கப் போகிறோம்!’’

நீங்கள் காரத்தை 35 நிமிடநேரம் சந்தித்துப் பேசியதன் மூலம் உங்கள் தே.மு.தி.க. தொண்டர்கள், ‘கறுப்பு எம்.ஜி.ஆர். சிவப்பாகிறார். மூன்றாம் அணிக்கு தமிழகத்தில் தலைமையேற்கப் போகிறார். ‘சிவப்பு மல்லி’, ‘ஜாதிக்கொரு நீதி’ படத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தவாதி கேரக்டர்களைப்போல நிஜத்திலும் மேடைதோறும் முழங்கப்போகிறார்!’ என்றெல்லாம் புளகாங்கிதப்பட்டு பேசிக்கொண்டிருக்கிறார்களே?

“நான் கம்யூனிஸத்தை எப்போதும் எதிர்த்தவனில்லை,கம்யூனிஸம் என்பது வறுமையில் பங்குபோடுவது மட்டும் கிடையாது. வளமான இந்தியாவிலும் பங்குபெறலாம் என்பதுதான் என் ஆதங்கம். சீனா வளமான சீனாவாக மாறி இருக்கிறது. இப்படியிருக்கும்போது நாம் மட்டும் கிழிஞ்ச சட்டைபோட்டுட்டு வந்தோம்னு சொல்லிக்கிறதுல என்ன அர்த்தம் இருக்கு? வறுமையில் மட்டுமல்ல; வளமான இந்தியாவிலும் பங்கு போடணும். அதைத்தான் நான் வரவேற்கிறேன். அதை பிரகாஷ்காரத் பொதுவாகவே புரிந்து வைத்திருக்கிறார். ரொம்ப பிரில்லியண்ட்டாகவும் இருக்கார். அவருடன் பேசியது ‘கறுப்பு எம்.ஜி.ஆர்’ சிவப்பாக மாறுகிறார். என்ற பேச்சை எழுப்புகிறதென்றால், அதற்கு நான் என்ன செய்ய? கறுப்பு எம்.ஜி.ஆராக இருந்தால் என்ன? அவருக்குள் ஓடுவதும் சிவப்பு ரத்தம்தானே? ‘மூன்றாவது அணிக்கு தலைமையேற்பீர்களா?’ என்று கேட்டீர்கள். நான் போடுகிற கண்டிஷனுக்கு மூன்றாவது அணி ஒத்துவரட்டும். நான் சொல்லுகிற மாதிரி எழுதித்தரட்டும். பிறகு பார்க்கலாம்!’’

எல்லாம் சரி, சமீபத்தில் ரஜினியுடன் ஒரே விமானத்தில் பயணம் செய்தீர்கள். என்ன பேசினீர்கள்?

“உண்மையிலேயே ஒண்ணும் பேசலைங்க. அவர் ஒரு பக்கம் ஒரு சீட்ல உட்கார்ந்திருந்தார். நான் ஒருபக்கம் ஒரு சீட்ல உட்கார்ந்திருந்தேன். விமானத்தை விட்டு இறங்கும்போதுதான் ‘என்ன விஜி, என்ன படம் போயிட்டிருக்கு? ‘அரசாங்கம்’ என்ன ஆச்சு? எப்ப ரிலீஸ்?’னு கேட்டார். நானும் பதில் சொன்னேன். அதற்குள் அவரவர் வாகனங்களுக்கு அருகே வந்துவிட்டதால், அவரவர் வண்டியில் ஏறிச்சென்றுவிட்டோம். அதைத்தான் சில பத்திரிகைகள் எதையெதையோ திரித்து எழுதுகின்றன.’’

இலங்கைத்தமிழர் பிரச்னையில் சர்ச்சைக்குரிய பதிலைக் கொடுத்துள்ளீர்களே?

“நான் சர்ச்சைக்குரிய பதில் எதுவும் தரவில்லை. அதை வெளியிட்டவர்கள்தான் திரித்துப் போட்டுவிட்டார்கள். ‘இலங்கைத் தமிழர்களுக்கு ஆயுதம் கொடுக்கலாமா? கூடாதா?’ என்ற கேள்விக்கு இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று ஆயுதம் எதுவும் கொடுக்கக்கூடாது என்பது தமிழர்களின்_தமிழ்நாட்டின் நிலை. அதுதான் என்னுடைய நிலைப்பாடும். ஆனால், இந்திய நாட்டைப்பொறுத்தவரை, ‘ஆயுதம் கொடுக்காவிட்டால் பாகிஸ்தானும், சீனாவும் உள்ளே வந்துவிடுவார்கள். இது இந்திய பாதுகாப்புக்கு அபாயத்தை விளைவிக்கும்!’ என்பது இன்னொரு நிலை. என்னைப் பொறுத்தவரை தடைசெய்யப்பட்ட இயக்கம்னு சொல்றவங்க கூடவெல்லாம் மாய்ந்து மாய்ந்து பேச்சுவார்த்தை நடத்துறீங்க. அதுபோல இலங்கைத்தமிழர் விஷயத்திலும் தமிழர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துங்க. முடிவு எடுங்க. என்னைப் பொறுத்தவரை எங்கும், எதிலும் மனித உரிமைகள் மீறப்படக்கூடாது. அவ்வளவுதான்!’’
( நன்றி: குமுதம் ரிப்போட்டர் )

Sunday, May 4, 2008

டெல்லியில் புதிய அலுவலகம் திறந்து வைத்தார் திராவிடர் தலைவர் விஜயகாந்த

டெல்லியில் கரோல் பாக் பகுதியில் தேமுதிக அலுவலகத்தை திறந்து வைத்தார் திராவிடர் தலைவர் விஜயகாந்த். இந் நிகழ்ச்சியில் விஜய்காந்தின் துணைவியார் பிரேமலதா, அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளருமான சுதீஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

பின்னர் ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகையில்,

மத்திய ஆட்சியில் தேமுதிக பங்கு வகிக்க வேண்டும் என்றோ, பிரதமராக வேண்டும் என்றோ எனக்கு ஆசை கிடையாது,
நாங்கள் மக்களுடன் மட்டும்தான் கூட்டணி வைத்துள்ளோம். வேறு யாருடனும் கூட்டணி இல்லை. ஒரு வேளை தமிழக மக்களுக்கு நல்லது செய்யும் கட்சியாக இருந்தால் அதனுடன் கூட்டணி குறித்துப் பேசலாம்.

ஆனால் மக்களுக்கு நல்லது செய்வோம் என்று காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி, பிற கட்சிகளாக இருந்தாலும் சரி எழுத்துப்பூர்வாக எழுதித் தர வேண்டும்.

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்ற ஒரே காரணத்திற்காக முல்லைப் பெரியாறு, பாலாறு, ஓகனேக்கல் என அனைத்துப் பிரச்சினைகளிலும் தமிழக மக்களின் நலன்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது காங்கிரஸ் கட்சி.

நாங்கள் மக்கள் பிரச்சினைகளுக்காக தேவையாக இருந்தால் மட்டுமே போராட்டம் நடத்துகிறோம். சட்டசபையில் நான், பஸ் கட்டண உயர்வு குறித்துப் பேசிய பிறகுதான் பஸ் கட்டணத்தை குறைத்தனர். முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக மக்கள் பிரச்சினைகள் குறித்து சட்டசபையில் பேசுவதே இல்லை.

டி.ஆர்.பாலு விவகாரம் குறித்து சட்டசபையில் பேச அனுமதியே தருவதில்லை.
எனக்கு எத்தனையோ சோதனைகள் தந்தார்கள். ஆனால் எத்தனை சோதனைகளை அவர்கள் கொடுத்தாலும் அதை சமாளிப்பேன். வெற்றி பெறுவேன்.

சினிமாவில் புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று சுகாதார அமைச்சர் அன்புமணி கூறி வருகிறார். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பல பிரச்சினைகள், குறைபாடுகள் உள்ளன. இவற்றை சரி செய்ய அவர் நடவடிக்கை எடுக்கவேண்டும்,
திருவள்ளூரில் நான்கு பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக இறந்தன. அதற்கு என்ன காரணம் என்பதை அவர் கண்டுபிடிக்கட்டும்.

இந்த டெல்லி பயணத்தின்போது பல்வேறு தேசியத் தலைவர்கள், தலைவரை சந்திக்கக் கூடும் என்று தெரிகிறது.

Wednesday, April 23, 2008

தலைவர் சிலைகளுக்கு அரசு பாதுகாப்புகொடுக்க வேண்டும், திராவிடர் தலைவர் கோரிக்கை


தலைவர்களின் சிலைகளை அரசுதான் பாதுகாக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள தேவர் சிலையை சிலர் இழிவுபடுத்தியிருப்பது தமிழ்ப் பண்பாட்டுக்கு விரோதமானது என்று சாடியுள்ளார்.

இந்தச் செயலைத் தொடர்ந்து ஏற்பட்ட சம்பவங்களால், மதுரை வட்டாரத்தில் பொது மக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தலைவர்களின் சிலைகளை வைப்பதற்கு அரசுதான் அனுமதி அளிக்கிறது; எனவே, அரசுதான் தலைவர்களின் சிலைகளைப் பாதுகாக்கவும் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மதுரையில் சம்பவம் நடந்தவுடன் அந்தப் பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தி பாதுகாப்பு அளித்திருந்தால் தடியடி நடத்தும் அளவுக்கு காவல்துறை செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Thursday, April 10, 2008

கூட்டு குடிநீர் திட்டத்தை வலியுறுத்தியும்,விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும் மாநிலம் முழுவதும் நடந்த போராட்ட விவரங்கள்...


தர்மபுரி ஏப்ரல் 10:

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். தர்மபுரி மாவட்ட செயலாளர் டாக்டர் வி.இளங்கோவன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் வி.சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

"கர்நாடக தேர்தல் முடியும் வரை குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற ஏன் காத்திருக்க வேண்டும்' என்றும்,

மத்திய,மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறி விட்டன. வேலை வாய்ப்பை உருவாக்க ஊழலை கட்டுப்படுத்த வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளனர். வசதி படைத்தோர், பணம் கொடுத்து வேலை பெறுகின்றனர். இது குறித்து சட்டசபையில் பேசினால், பதில் கிடைக்கவில்லை.

"வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்' என்று பெருமையாக பேசுவதுண்டு. இங்கே நிலைமையை பாருங்கள். சொந்த ஊரில் வேலைவாய்ப்பு இன்றி தர்மபுரி மாவட்ட மக்கள் வெளிமாநிலங்களுக்கு செல்லும் நிலையுள்ளது.அண்டை மாநிலங்களுடன் முல்லை பெரியாறு, பாலாறு, காவிரி ஆறு சம்பந்தமான பிரச்னைகள் உள்ளன. மத்திய அரசு இதைக் கண்டிப்பதில்லை. ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு 1998ல் ஒப்பந்தம் செய்து, பெங்களூருக்கு குடிநீர் கொண்டு சென்று விட்டனர். பத்தாண்டுகளாக நாம் என்ன செய்தோம். ஒகேனக்கல் பிரச்னையில் "தமிழர் உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக, கர்நாடக தேர்தல் வரையில் அமைதி காப்போம்' என முதல்வர் கூறியுள்ளார். இதில் அனைத்து கட்சிகளையும் அழைத்து பேசியிருக்கலாம்.


மழை பாதித்த போது, எதிர்க்கட்சிகளை அழைத்து கருத்து கேட்கவில்லையா. ஒகேனக்கல் பிரச்னையில், "யார் நிர்பந்தம் காரணமாகவும் சொல்லவில்லை' என, முதல்வர் தெரிவித்தார். வீரப்ப மொய்லி மறுநாளே, "சோனியா கேட்டு கொண்டதால் திட்டம் நிறுத்தி வைத்திருப்பதாக' கூறுகிறார். மக்களை ஏமாற்றும் அரசுகள் நடந்து வருகின்றன.வார்த்தை ஜாலத்தால் தமிழக மக்களை முதல்வர் ஏமாற்றி வருகிறார். மக்களை ஏமாற்றும் அரசே நடந்து வருகிறது. ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு ஜப்பான் நாட்டில் தான் நிதி பெற வேண்டுமா. கர்நாடக தமிழர்கள் வாழ்வதற்கு ஏற்ப, மாற்றி கொண்டனர். கர்நாடக தேர்தல் வரை திட்டத்தை நிறைவேற்ற ஏன் காத்திருக்க வேண்டும். மத்திய அரசின் ஆதரவான கவர்னர் ஆட்சி தானே கர்நாடகாவில் நடக்கிறது. 1971ல் காவிரி நீர் பங்கீட்டில் இடைக்கால தீர்ப்பு வந்த போது, கர்நாடகாவில் தேர்தல் வந்தது. அப்போதைய முதல்வர் கருணாநிதி, நீதிமன்றத்துக்கு செல்வதை இந்திராகாந்தி தடுத்தார். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் தற்போது சோனியா தடுத்துள்ளார். மாமியார், மருமகளுக்காக தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.

நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் குடிநீர் திட்டம் கிடைக்காது. அரசுகளும், தேசிய கட்சிகளும் மக்களை எப்படி ஏமாற்றி வருகின்றனர் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த போராட்டம். திட்டத்துக்கு கர்நாடகாவில் கிருஷ்ணாவும், எடியூரப்பாவும், தேவகவுடாவும் எதிர்ப்பு தெரிவிக்கும் போது, ஆட்சிக்கு வந்தால் எப்படி அவர்கள் ஒப்புதல் அளிப்பார்கள்.தேசிய கட்சிகளுக்கு ஓட்டு போடாதீர்கள். சிறப்பு பொருளாதார மண்டலம், விமானநிலையம் விரிவாக்கம் என கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு பயந்து அரசு பின் வாங்கி வருகிறது. பதவியை தக்க வைத்து கொள்ள நிர்பந்ததுக்கு கட்டுப்பட்டு வருகிறது. இவ்வாறு தலைவர் விஜயகாந்த் பேசினார்.

மேலும்
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட விஷயத்தில் மத்திய-மாநில அரசுகள் நாடகமாடுகின்றன. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புளோரைடு என்ற நச்சுத்தன்மை கலந்த தண்ணீரை மக்கள் குடித்து எலும்பு, பல், கண் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் தவித்த வாய்க்கு தண்ணீர் தானே கேட்கிறார்கள். வேறு என்ன ஆட்சியாளர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள்? ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் என்பது இந்த மாவட்ட மக்களின் ஜீவாதாரம். அது ஏன் மறுக்கப்படுகிறது?.

பால்,பேருந்து கட்டணம்,காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது..மறைமுகமாக பேருந்து கட்டணம் உயர்த்தபட்டுள்ளது,தமிழக அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,தொடக்க கல்வியில் 64 இலட்சம் குழந்தைகள் படித்தபோதும் ,12 ம் வகுப்பு பொதுத்தேர்வை 11 இலட்சம் மாணவர்கள் தான் எழுதுகின்றனர்,எனவே சமச்சீர் கல்விமுறையை கொண்டுவருவது அவசியமாகும்,

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. புதிய ரத்தம், புதிய சிந்தனைகளுக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும். தேசிய கட்சிகளை நம்பாதீர்கள். ஒரு தடவை ஆட்சி மாற்றத்தை மத்தியிலும், மாநிலத்திலும் ஏற்படுத்துங்கள். தேசிய கட்சிகளுக்கு ஓட்டு போட்டு போட்டு நாம் ஏமாந்து விட்டோம். மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். சரியான தலைமையை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்

இவ்வாறு புரட்சிக்கலைஞர் திராவிடன் விஜயகாந்த் பேசினார்.



சென்னை ஏப்ரல் 10:
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை உடனே நிறைவேற்ற கோரியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தினர் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில இளைஞர் அணி துணை செயலாளர் கு.நல்லதம்பி முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது:-

ஒகேனக்கல் திட்டம்

ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டம் 1998-ல் கர்நாடகத்தால் ஒப்பு கொள்ளப்பட்ட திட்டம். கடந்த 10 ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தும் திட்டத்தை நிறைவேற்றவில்லை. கர்நாடகாவில் உள்ள சில அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் இப்போது இந்த திட்டத்தை நிறைவேற்ற கூடாது என்கிறார்கள். குடிக்கும் தண்ணீரை கூட, தர மறுக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு கன்னட வெறியர்களின் கோரிக்கைகளை ஏற்று, திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. இந்த பிரச்சினையை தலையிட்டு தீர்க்க வேண்டிய மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களுக்கு குடிதண்ணீர் கிடைக்கும் திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது.

தமிழக மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நம்பிக்கை நட்சத்திரம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். மக்களின் பிரச்சினைகளுக்காக போராடும் கேடயம் தே.மு.தி.க. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக மக்களிடையே கட்டாயம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார்.

Sunday, April 6, 2008

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கா தர்மபுரியில் தேமுதிக வரும் 10ம் தேதி எழுச்சி ஆர்ப்பாட்டம்







தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் ஆளும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து வருகின்ற 10ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்கள் அலுவலகம் முன்பு தேமுதிகவின் சார்பில் எழுச்சி ஆர்ப்பாட்டங்கள் அந்த அந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நடக்க உள்ளதாக தேமுதிக பொது செயலாளர் திரு.இராமு வசந்தன் தெரிவித்தார்,

மேலும் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் தலைவர் திராவிடர் கேப்டன்விஜயகாந்த் தலைமை தாங்குவார் எனவும்,

மாநில நிர்வாகிகள் , சார்பு அணிகள்,தலைமக்கழக பேச்சாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றுவார்கள் என்றும் கூறினார்.

Friday, April 4, 2008

வணக்கம் தோழர்களே...



தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம்